செரிமானத் தன்மையை மேம்படுத்தும் ஜவ்வரிசிப் பாயசம் தேவையான பொருள்கள்: ஜவ்வரிசி ஒரு சிறு கப் சர்க்கரை 2 கப் பால் 2 கப் ஏலக்காய் 4 முந்திரிப் பருப்பு 4 (உடைத்தது) கேசரிப் பவுடர் ஒரு சிட்டிகை குங்குமப்பூ 2 சிட்டிகை திராட்சை 6 செய்முறை: முழு முந்திரிப் பருப்பை இரண்டு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை ஏற்கனவே நிறைய அரைத்து வைத்து இருந்தால் கால் ஸ்பூன் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் நான்கு ஏலக்காயையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை ஒரு கனமான பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டுப் பொன்னிறம் வரும் வரையில் வறுக்கவும். ஜவ்வரிசி பொன்னிறத்தில் வந்த மாத்திரத்தில் அரை அழாக்குத் தண்ணீரைக் கொட்டி, கட்டியாகாமல் நன்கு கிண்டவும். ஜவ்வரிசி நன்கு வெந்த மாத்திரத்தில் உடன் சர்க்கரையை சேர்த்து மீண்டும் அடிப்பிடிக்காமல் கிண்டவும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். இப்போது இரண்டு கரண்டி காய்ச்சின பாலில் குங்குமப் பூ, கேசரிப் பவுடர், முன்பே பொடி செய்த ஏலக்காய் ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்கு கலக்கி மீண்டும் ஜவ்வரிசியுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி உடன் நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை ஆகிய இவற்றையும் சேர்க்கவும். இதோ இப்போது சுவையான ஜவ்வரிசிப் பாயசம் தயார். பின்குறிப்பு : இந்த ஜவ்வரிசியை குக்கரில் வேக வைத்தும் பின் இறக்கி மேற்கண்ட பொருள்களை சேர்த்தும் செய்யலாம். இதில் அடிப் பிடிக்கும் பிரச்சனை வராது. இது கால்சியம் மற்றும் உடலுக்கு தேவையான கார்போ ஹைட்ரேட் ஆகிய இரண்டையுமே தர வல்லது. உடல் பருமன் அடைய நினைப்பவர்கள் இதனை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

Comments
Post a Comment